CCM Tamil Bible Study - ஏழாம் தூதனின் காலம் அறிவிக்கப்படுகிறது
- Get link
- X
- Other Apps
வெளி 10:6d. ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப் போகிறபோது தேவ ரகசியம் நிறைவேறும் என்றான். வெளி11:15;ஏசா24:1-23;26:1-27:13;66:1-24;தானி7:11,12;சக14:1-21;மல்3:4.
ஏழாம் தூதனின் காலம் அறிவிக்கப்படுகிறது
ஏழாம் தூதனின் காலம் என்பது ஏழாம் தூதன் எக்காளம் ஊதுகிற நாட்களிலிருந்து ஆரம்பமாவதாகும். ஏழாம் தூதன் குறித்து பலவிதமான அபிப்ராயங்கள் காணப்படுகிறது. இங்கு இப்பகுதியில் உள்ள இரு காரியங்களை மட்டும் தியானிப்போம்.
முதலாவது ஏழாம் தூதனின் நாட்களில் உண்டாகும் சத்தங்கள் குறித்ததாகும். வெளிப்படுத்தல் 11 : 15 லிருந்து 15 ஆம் அதிகாரம் வரை நம் கணக்கிடும் போது ஏழாம் தூதனின் காலத்திய சத்தங்களை அறிய முடியும். 11:15,19;12:10;14:2,7,9,13,15,18;15:3,4 போன்றவைகள் ஆகும். 11:15லும 11:19லும் சொல்லப்பட்டுள்ள சத்தங்களின் தாற்பரியங்களை நாம் அறிய முடியாவிட்டாலும் அக்காலத்திய மக்கள் நிச்சயம் அறிவார்கள். கடைசி காலங்களில் தூதர்களின் வெளிப்படுதல் நிச்சயம் உண்டாகும். உலகத்தில் நடக்கும் இயற்கையான நிகழ்வுகளை தவிர்த்து இயற்கைக்கு மாறாக நடக்கிற காரியங்கள் உண்டாகும். இந்த சத்தங்களினால் மனிதர்களுக்குள் எவ்விதமான மீட்பையும் எழுப்புதலையும் கொண்டு வராது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். மீட்பும் பாவங்களை அறிக்கையிட்டு மனந்திரும்புதலும் பரிசுத்த ஆவியானவரின் விலக்கிக் கொள்ளப்படும் நாட்கள் வரையிலுமேயாகும். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தினால் உண்டாகும் மீட்பு தவிர வேறு எவ்விதத்திலும் மீட்பு உண்டாவதில்லை. மன கடினமே உண்டாகும்.
இரண்டாவது தேவ இரகசியம் நிறைவேறும் என்பதாகும். இதுவரையிலும் மறைக்கப்பட்டிருந்த இறுதி காலம் சார்ந்தவைகள் இக்காலத்தில் நிறைவேறும். தீர்க்கதரிசிகள் மூலமாய் உரைக்கப்பட்டு மறைக்கப்பட்டிருந்தவைகள் யாவும் நிகழ்வுகளாக - வரலாற்று நிகழ்வுகளாக நடந்தேறும். தேவ இரகசியம் நிறைவேறுவதை இயேசு கிறிஸ்துவை குறித்து கேள்விப்படாதவர்கள் அறிய இயலாது. ஆகையினால் முழு உலகமும் இயேசு கிறிஸ்துவின் மீட்பின் செய்தியையும் தேவனுடைய அழிப்பின் நிகழ்வுகளின் செய்திகளையும் குறித்து கேள்விப்பட்டிருப்பார்கள். சபை எடுத்துக் கொள்ளப்பட்ட பின்பு கைவிடப்பட்டவர்கள் கடைசி கால வரலாற்று நிகழ்வுகளில் தேவனுடைய இடைபடுதலை கண்டு மறைந்திருந்தவைகள் வெளியரங்கமாகின்றன என்று கூறுவார்கள். ஆனாலும் மீட்புக்குரியவர்களாக இருக்க மாட்டார்கள். வெறுப்பும், கோபமும், மூர்க்கமும் உடையவர்களாக மன கடினப்பட்டு காணப்படுவார்கள்.
இக்காலத்திலும் கூட மீட்பின் காரியங்கள் குறித்த விழிப்புணர்வும், கடைசி காலம் குறித்த தெய்வ பயமும் இல்லாத சந்ததிகள் சபைகளையும் தேசங்களையும் மூடிக்கொண்டிருக்கின்றது என்பதை மறந்து போக முடியாது.
எது மறைக்கப்பட்டிருந்ததோ அது நிறைவேறும்.
ஆனால் நாம் எங்கிருப்போம்?
ஆதிகாலங்களுக்கும் தலைமுறைதலைமுறைகளுக்கும் மறைவாயிருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தைப் பூரணமாய்த் தெரியப்படுத்துகிறதற்கு,
உங்கள்பொருட்டுத் தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட உத்தியோகத்தின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன்.
புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார். கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்.
கொலோசெயர் 1:25-27
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment