CCM Tamil Bible Study - விக்கிரகங்கள்
- Get link
- X
- Other Apps
வெளி 9:20b. அப்படியிருந்தும் பொன் வெள்ளி செம்பு கல் மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளையும் காணவும் கேட்கவும் நடக்கவும் மாட்டாதவைகளாய் இருக்கிற விக்கிரகங்களை வணங்காதபடிக்கு மனந்திரும்பவில்லை.
விக்கிரகங்கள்
விக்கிரகங்கள் என்ற சொல் உண்மையானதாகவோ கற்பனையானதாகவோ மனதில் நிர்ணயிக்கப்பட்ட ஒரு சாயலை ஒரு தோற்றத்தை காணும்படியாக வடிவமைப்பதாகும். இவ்விதமான பொருள் பிற மத தெய்வங்களின் காட்சி பொருள்களாகிய சிலைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பொய்யான தெய்வங்களையும் இச்சொல் குறிக்கும். இச்சொல் புதிய ஏற்பாட்டில் 11 தடவைகள் வந்துள்ளது. அப்7:41;15:20;ரோம2:22;1கொரி12:2;2கொரி6:16;1தெச1:9;1யோவா5:21;1கொரி8:4,7;10:19. வெளிப்படுத்தலில் இவ்விடத்தில் மட்டுமே வருகின்றது.
இந்த விக்கிரகங்கள் குறித்து மூன்று விஷயங்கள் இங்கு கூறப்பட்டுள்ளது
ஒன்று இந்த விக்கிரகங்கள் பொன் வெள்ளி செம்பு கல் மரம் ஆகிய ஐந்து பொருட்களினால் உருவாக்கப்பட்டவைகளாகும். தேவன் மனிதனை பூமியின் மண்ணினால் உருவாக்கி அவனுக்கு தன் ஜீவனை தந்து உயிருள்ளவனாகினார். அதாவது அசையும் ஒன்றாக மாற்றினார். இந்த மனிதனோ தனக்கு உயிர் தந்த தேவனை உயிரற்ற பொருட்களாக வடிவமைத்துக் கொள்கின்றான். தான் பயன்படுத்தும் பொருட்களைக் கொண்டு கடவுள்களை உருவாக்கிக் கொள்கின்றான்.
இரண்டாவது இந்த விக்கிரகங்கள் காணவும் கேட்கவும் நடக்கவும் இயலாத தெய்வங்களாக வலம் வருகின்றன. தங்களால் உருவாக்கப்பட்ட தெய்வங்களுக்கு உருவாக்கினவனால் உயிர் கொடுக்க முடியவில்லை. மின்கலங்கள் மூலம் மின்சாரம் மூலமும் தற்காலத்தில் அவைகளை இயக்குவதற்கும் முயற்சிக்கின்றான். உயிருள்ள தெய்வத்தை செயல்படுகின்ற இறைவனை பார்த்து அறிந்து செயல்படுவதற்கு பதிலாக தன்னை பார்த்து தெய்வங்களை செயல்படுத்த முனைகின்றான் மனிதன்.
மூன்றாவது இப்படிப்பட்டவைகளை வணங்குகின்றவனாக இருக்கின்றான் மனிதன். அதாவது இவைகளை முத்தமிடுகின்றவனாகவும், இவைகள் முன்பு அங்க பிரதட்சணம் செய்கிறவனாகவும், தலைகுனிந்து வணங்குகின்றவனாகவும், மரியாதை கானம் புகழ் மேன்மை கொடுக்கின்றவனாகவும் இருக்கின்றான். தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியவைகளை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகின்றவனாகவும் பணிந்து வணங்குகின்றவனாகவும் இருக்கின்றான். காணப்படுகிற யாவற்றையும் ஆளுகைக்குள் வைத்திருக்க சிருஷ்டிக்கப்பட்டவன் அவைகளின் ஆளுகைக்குள் இருக்கிறவனாக தன்னை மாற்றிக் கொண்டான். அவைகளை நோக்கி பெயரிட்டு கூப்பிடுகின்றான். அவைகள் தங்களுக்கு உதவும் படியாக யாசிக்கின்றான். அவைகள் தீங்குச் செய்யும் என்று பயப்படுகின்றான். அவைகளை எல்லாவற்றுக்கும் மேலாக உயர்த்தி வைக்கின்றான்.
வீணராகி போன மனிதன்.
அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.
அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,
அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.
ரோமர் 1:21-23
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment