CCM Tamil Bible Study - கிரீடம்
- Get link
- X
- Other Apps
கிரீடம்
வெளி 3:11b. ஒருவரும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு. வெளி2:10;4:4,10;1கொரி9:25;2தீமோ2:5;4:8;யாக்1:12;1பேது5:3,4; எரே 40.
கிரீடம் சூட்டப்படுதல் மகிழ்வான காரியமும், பெருமைக்குரிய காரியமுமாகும். ஆனால் இந்த கிரீடம் பெற்றுக்கொள்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள விலை மிகவும் அதிகமானது. எத்தனையோ ஒழுங்கு முறைகள் வழியாகதான் இதனை பெற்றுக்கொண்டுள்ளனர் பிலதெல்பியர். பெற்றுக்கொண்ட கிரீடத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளக்கூடிய காரியம் முக்கியமானதாகும். அதைவிட தலையில் சூட்டப்பட்டுள்ள கிரீடத்துக்காக ஆசைபடுவோரும், எடுத்துக்கொள்ள பதுங்கியிருப்போரும் மிகவும் அதிகமாயுள்ளனர். பெற்றுக்கொள்ள எவ்வளவு முயற்சித்தார்களோ அதைவிடவும் அதிகமாக கிரீடத்தை பிறர் கவர்ந்துக்கொள்ளாமல் காப்பதுவே மேலானது ஆகும்.
சூட்டப்பட்ட கிரீடத்தை பறித்துக்கொள்ள கொள்ளைக் கூட்டம் சுற்றிலும் காணப்படுகின்றனர் என்பதை மறந்துவிடலாகாது.
விவிலியத்தில் இரு இடங்களில் கிரீடங்களை பறித்துக்கொண்ட நிகழ்வுகள் நடந்துள்ளது. ஆதிமனிதனின் தலைமேல் வைக்கப்பட்டிருந்த அதிகாரம் என்ற கிரீடத்தை கூடவே இருந்த சர்ப்பம் வஞ்சித்துப் பறித்து விட்டது. நேபுகாத்நேசாரால்பதவியில் அமர்த்தப்பட்ட கெதலியாவை கூடவே இருந்த இஸ்மவேல் வெட்டிக் கொன்றுப்போட்டான். இந்த அடிப்படையில்தான் ஒருவரும் உன் கிரீடத்தை எடுத்துக் கொள்ள இடம் தராதே என்றுக் கூறுகின்றார்.
தேவனுடைய பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள இரட்சிப்பை, உரிமையின் சின்னமாகிய பரிசுத்த ஆவியை, அதிகாரத்தின் அடையாளமாகிய கிரீடத்தை பிறர் பறித்துக்கொள்ளும்படி இடம் கொடுக்கலாகாது. பிசாசானவன் தனக்கு கிடைக்காத ஆளுகையை தேவனுடைய மக்கள் அனுபவிக்க விடமாட்டான். அதனை தடுக்க பற்பலவிதமான உபாயங்களை செய்கிறான். ஆகையினால்தான் பிசாசின் தந்திரங்களை எதிர்த்து நிற்கவும், அவனின் உபாயங்களை அறிந்திருக்கவும் வேண்டும் என்று விவிலியம் கூறுகின்றது. எக்காலத்திலும் இல்லாத அளவுக்கு சமீப காலங்களாக கிறிஸ்துவின் மேலுள்ள உண்மையான விசுவாசத்தை இழந்தவர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றனர். உலக நன்மைகளுக்கும் உலக ஆடம்பர வாழ்வுக்கும் பதவிகளைக் கொண்டு தங்களை உயர்த்திக் காண்பிப்பதற்கும் அதிகமாகப் பிரியப்படுகின்றனர். பணிவிடையின் அடையாளமாகிய அங்கி இக்காலத்தில் பெருமையின் அடையாளமாகி விட்டது. முழங்காலில் நின்று சாதித்த பெரிய மனிதர்களின் வாரிசுகள் முழங்கால்களின் மரியாதையை குலைக்கும் முறைகளில் காணப்படுகின்றனர். பணம், பொருள், ஆடம்பரம், பதவிக்காக எதையும் துணிந்து செய்ய முயற்சிக்கின்றார்கள். எடுத்துக் கொள்ளவும், பறித்துக் கொள்ளவும் நல்லவர்களைப்போல நடமாடும் மக்களை குறித்து எச்சரிக்கை.
எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. 2தீமோ 3:1-4.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment