CCM Tamil Bible Study - அவரே அவர்
- Get link
- X
- Other Apps
அவரே அவர்
வெளி 3:7e. ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு திறக்கிறவரும், ஒருவரும் திறக்ககூடாதபடிக்கு பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது.. வெளி 5:3-5,9;யோபு11:10;12:14;மத்16:19.
ஒரு அறையை அவர் பூட்டினால் அதை வேறு ஒருவரும் திறக்க முடியாது. அதே அறையை அவர் திறந்தால் அதை வேறு ஒருவரும் பூட்ட முடியாது. இயேசு கிறிஸ்து ஒருவருடைய இருதயத்தை திறப்பாரானால் அதை அந்நபரோ அல்லது வேறு யாருமோ தடுக்க முடியாது. அவர் ஒருவரின் இருதயத்தை அடைப்பாரானால் வேறு ஒருவரும் அந்த இருதயத்தை திறக்க முடியாது. இக்காரியமானது இயேசு கிறிஸ்துவின் உண்மையான தன்மைகள் சிலவற்றை குறிப்பிடுகின்றது.
முதலாவது, சபைக்குள் சேர்க்கிறவர் அவர் மட்டுமே. எவரொருவர் சுவிசேஷத்தை அறிவித்தாலும், அற்புத கிரியைகளை நடப்பித்தாலும் ஆத்துமாக்களை இரட்சிக்கிறவர் அவரே. இரட்சிக்கப்படுகிறவர்களை கர்த்தர் சபையிலே சேர்க்கிறார். அப் 2:47. இரட்சிப்பதும், சபையில் சேர்ப்பதும் அவருடைய வேலை. ஊழியகாரனின் வேலை பிரசங்கிப்பது மட்டுமே. சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க வேண்டும். இந்த விசுவாசி என்னுடைய விசுவாசி என்று சொல்லுவதற்கு எந்த உரிமையும் இல்லை. அவரே அவர்களின் எஜமானன். சுவிசேஷம் அறிவிப்பது மட்டுமே பிரதான வேலை. இயேசு கிறிஸ்து சீஷர்களுக்கு கொடுத்த கட்டளை இதுவாகும். மாற் 16:15,16.
விசுவாசத்தை துவக்குகிறவரும், முடிக்கிறவரும் அவரே. விசுவாசத்திற்குரிய வசனங்களை பிரசங்கிப்பதுதான் ஊழியர்களின் வேலை. எவருக்குள் விசுவாசத்தை உருவாக்க விரும்புகிறாரோ அவர்களுக்குள் விசுவாசத்தை துவங்குகிறார். அந்த விசுவாசத்தை எவரும் தடுக்கவும் முடியாது, நிறுத்தவும் முடியாது. ரோமர் 10:14-17; எபி 12:1.
எவர் மேல் இரக்கமாயிருக்க விரும்புகிறாரோ அவர்கள் மேல் இரக்கமாயிருக்கிறார். எவருடைய இருதயத்தை கடினபடுத்த விரும்புகிறாரோ அவர்களின் இருதயத்தை கடினபடுத்துகின்றார். ரோமர் 9:18. அவர் இவ்விதம் செய்வதைக் குறித்து ஒருவரும் கேள்விக் கேட்ககூடாதபடிக்கு அவர் காணப்படுகிறார். ஒருவரும் விசுவாசிகள் மேல் உரிமைபாராட்டாதபடிக்கு அவரே இரட்சிக்கிறார், அவரே சேர்க்கிறார், அவரே வேண்டாமென்று ஒதுக்கி விடுகிறார்.
அவர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும். அவரின் வாக்கு , செயல் யாவும் அவரையே உயர்த்திக் காட்டுகின்றது. தேவனுடைய இராஜ்யத்தில் ஒருவரை சேர்ப்பதும் வெளியேற்றுவதும் எவரொருவரின் வேலையுமல்ல, அவரின் வேலையே. சபையின் திறவுகோல், ராஜ்யத்தின் திறவுகோல் அவரிடமே உள்ளது. போப்பிடமோ, விஷப்பிடமோ, போதகரிடமோ, மூப்பர்களிடமோ, விசுவாசிகளிடமோ இல்லை. யாரை இரட்சிக்க வேண்டுமோ அவரை இரட்சிக்கிறார். யாரை சிட்சிக்க வேண்டுமோ அவரை சிட்சிக்கிறார். யாரை ராஜ்யத்தில் சேர்க்க வேண்டுமோ அவரை ராஜ்யத்தில் சேர்க்கிறார். யாருக்கு எதை கொடுக்கு வேண்டுமோ அதை அவர்களுக்கு கொடுக்கிறார். நன்மைகள், வரங்கள், ஆசீர்வாதங்கள், தாலந்துகள் யாவும் அவர் கொடுப்பதுவே. அவர் தமக்கு பிரியமானவனுக்கு கொடுக்கிறார். தன்னுடைய நிபந்தனையை எவரொருவர் பூர்த்தி செய்கிறார்களோ அவர்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்கிறார். கிருபையால் ராஜ்யத்தை வாக்குறுதியாக பெற்றோம். இனி கீழ்படிதலில் வாழ்ந்தால் அவரது ராஜ்யத்தில் செல்ல முடியும். அவர் பூட்டியிருப்பதினால் எவரும் ஒன்றும் செய்ய முடியாது. அவரால் அன்றி இரட்சிப்பையோ, ராஜ்யத்தையோ சுதந்தரிக்க முடியாது. நோவாவின் பேழையை பூட்டிய ஆண்டவரின் பூட்டையே திறக்க இயலாத மனுகுலம் ராஜ்யத்தின் பூட்டை திறக்க முடியுமா?. மனுகுலம் மீட்கப்பட்டு அவரின் ராஜ்யத்துக்குள் செல்லும் படிக்கு அவர் திறந்து வைத்துள்ள ராஜ்யத்தை இவ்வுலகத்தின் அரசாங்கத்தினால் பூட்ட இயலுமா?.
அப்பொழுது செபதெயுவின் குமாரருடைய தாய் அவரிடத்தில் வந்து அவரைப்பணிந்து கொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள். அவர் அவளை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்யவேண்டும் என்றாள். இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் கூடுமா என்றார். அதற்கு அவர்கள் கூடும் என்றார்கள். அவர் அவர்களை நோக்கி: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும் என் வலது பாரிசத்திலும் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார். மத்தேயு 20:20-23.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment