கட்டியெழுப்பப்பட்ட சமாரியா பெண்
சமாரியா - இந்த தேசம் எருசலேமிலிருந்து வடக்கு பக்கமாக 30 மைலுக்கப்பால் இருந்தது. உம்ரி அரசன் மலைபாங்கான இப்பகுதியில் உள்ள ஒரு மலையை சமாரியா என்பவனிடமிருந்து வாங்கி அதில் கோட்டைகளை கட்டி, அவைகளுக்கு சமாரியா என்று பெயரிட்டான்.
1இராஜாக்கள் 16:23,24.
★ இது வட இஸ்ராயேலின் தலைநகரம்.
★ அசீரியர்களால் பல ஜன குடியேற்ற பகுதியாக மாறியது.
★ இங்கு பாகாலுக்கு கோயில்கள் உண்டு. இங்குள்ளவர்கள் விக்கிரகராதனை செய்கிறவர்களாகவும், சிலர் பாலியல் தொழில் செய்கிறவர்களாகவும் காணப்பட்டனர்.
★ இயேசுவின் காலத்துக்கு பின் பிலிப்பு இங்கு ஊழியம் செய்தார்.
★ இயேசு கிறிஸ்துவின் ஊழிய நாட்களில் பாலியல் தொழில் அல்லது விபசார ★ பாவம் செய்து வந்த ஒரு பெண்ணை நலவழி படுத்தி சிறந்த பெண்மணியாக மாற்றினார்.
தாறுமாறான அவளின் வாழ்வு கர்த்தராகிய இயேசுவினால் கட்டியெழுப்பப்பட்டு ஆவிக்குரிய வாழ்வாக மாறியது.
இதற்கு அவள் என்ன செய்தாள்?
1. கேள்வி கேட்கிறவளாயிருந்தாள்
ஒன்றை அறிந்துக்கொள்ள துடிக்கும் உணர்வு உடையவளாயிருந்தாள்.
சண்டை பண்ணி கேள்வி கேட்கிறவளல்ல, அறியும்படியாக கேள்வி கேட்கிறவள்.
நாம் அறியும்படியாகவோ உணரும்படியாகவோ கேட்க விரும்புவதில்லை.
ஆனால் இவள் கேட்ட கேள்விகள் ஆழமானவைகளாகும்.
எப்படிபட்ட கேள்வி கேட்டாள்?
• குலம் சார்ந்த கேள்வியை கேட்டாள்.. வச 9.
• ஜீவதண்ணீர் குறித்த கேள்வி கேட்டாள். வச 10-15.
• தொழுகை குறித்து கேள்வி கேட்டாள். வச 20-24.
• மேசியா குறித்து கேள்வி கேட்டாள். வச 25,26.
இன்றைக்கு, நாம் விவிலியம் குறித்தும், இயேசுவை குறித்தும், சபையை குறித்தும் அறிந்துக்கொள்ளும்படியாக பிரயாச படுகிறோமா?
அப்போஸ்தலர் 17:10,11
உடனே சகோதரர் இராத்திரிகாலத்திலே பவுலையும் சீலாவையும் பெரோயா பட்டணத்துக்கு அனுப்பிவிட்டார்கள்; அவர்கள் அங்கே சேர்ந்து, யூதருடைய ஜெபஆலயத்திற்குப் போனார்கள்.
அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.
2. உண்மையை ஒத்துக்கொண்டாள்
வச 16-18.
தன்னை குறித்து சொல்லப்பட்ட வெளிப்பாடுகளை ஒத்துக்கொண்டாள்.
தன் பாவத்தை ஒத்துக்கொண்டாள்…
தன் தவறான பழக்க வழக்கங்களை ஒத்துக்கொண்டாள்..
விவிலியத்தில் தாவீது
சங்கீதம் 32:5 ல் நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்.
சங்கீதம் 38:18 ல் என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்தினிமித்தம் விசாரப்படுகிறேன்.
சங்கீதம் 51:3,4 ல் என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.
சங்கீதம் 41:4 ல் கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன்.
நீதிமொழிகள் 28:13 ல் தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
உண்மையை ஒத்துக்கொள்ளாதிருப்பதும் பாவமே.
1யோவான் 1:8,10 ல் - நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.
தவறுகளை
தேவனிடம் அறிக்கையிடுவதும் உண்டு…
போதகரிடம் அறிக்கையிடுவதும் உண்டு…
நாம் அறிக்கையிட்டால்… 1யோவான் 1:9 ல் நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
3. இயேசுவை தன் ஜனத்தாருக்கு அறிவித்தாள்
வச 4:28-30, 39, 40-42.
அவளுக்கு இயேசு எந்த அற்புதத்தையும் செய்யவில்லை.
ஆனால் எல்லா அற்புதங்களைவிடவும் பெரிய அற்புதத்தை அனுபவித்தாள்.
அவள் தன் பாவம் நீங்கியதை உணர்ந்தாள், தன்னில் இருந்த இச்சையின் ஆவி நீங்கியதை உணர்ந்தாள், பாவமன்னிப்பையடைந்தாள், இரட்சிப்படைந்தாள், சமாதானத்தினால் நிரப்பப்பட்டாள். தான் பெற்ற மாற்றத்தை தன் ஊராருக்கு அறிவித்தாள். அவளால் ஒரு சபை ஒருசில மணிநேரத்தில் உண்டானது. இவள் உருவாக்கிய சபை இயேசுவை உலக இரட்சகர் என்று அறிக்கையிட வைத்தது. வச 41,42.
இரட்சிக்கப்பட்ட தேவ பிள்ளையின் முக்கிய பணி இரட்சிப்பை பிறருக்கு அறிவிப்பதுதான்.
1தெச 1:5-10 ல் எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழுநிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்கள்நிமித்தம் எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே. நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, தοருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி,
இவ்விதமாய் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் யாவருக்கும் மாதிரிகளானீர்கள். எப்படியெனில், உங்களிடத்திலிருந்து கர்த்தருடைய வசனம் மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் தொனித்ததுமல்லாமல், நாங்கள் அதைக்குறித்து ஒன்றும் சொல்லவேண்டியதாயிராதபடிக்கு, தேவனைப்பற்றின உங்கள் விசுவாசம் எங்கும் பிரசித்தமாயிற்று. ஏனெனில், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடத்தில் நாங்கள் அடைந்த பிரவேசம் இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களை விட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும், அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும், அறிவிக்கிறார்களே.
இதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை.
மன்னிப்பு பெற்றவன் சுவிசேஷம் அறிவிப்பான். சங்கீதம் 51:13 ல் அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்.
இந்த சமாரியா பெண் இயேசு கிறிஸ்துவினால் கட்டியெழுப்பப்பட்டபோது ஊழியகாரியாக மாறினாள்.
Comments
Post a Comment